சென்னை: அரசு பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு, ஆறு மாதங்களில் இருந்து ஒன்பது மாதங்களாக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.அரசு பணியில் உள்ள பெண்கள், தங்களின் பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க, 90 நாட்கள், மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டது;
இது, 1980 முதல் நடைமுறையில் இருந்து வந்தது. அதை, 2011 மே 16 முதல், ஆறு மாதங்களாக உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.கடந்த சட்டசபை தேர்தலின் போது பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலம், ஒன்பது மாதங்களாக உயர்த்தப்படும் என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பெண் ஊழியர்களுக்கான, ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு, ஒன்பது மாதமாக உயர்த்தப்படும் என, சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி, பெண் ஊழியர்கள், ஒன்பது மாத காலம் மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதி அளித்து, நேற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணா பிறப்பித்துள்ளார். இதன் மூலம் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பாக, 270 நாட்கள் வழங்கப்படும். இந்த விடுப்பை, பெண்கள் மொத்தமாகவோ அல்லது மகப்பேறுக்கு முன், மகப்பேறுக்கு பின் என, பிரித்தோ எடுத்துக் கொள்ளலாம். தற்போது, மகப்பேறு விடுப்பில் இருப்போருக்கும் இது பொருந்தும்.
No comments:
Post a Comment